"ஆத்தா நான் பாஸாயிட்டேன்..": குஷி ஸ்டாலின், நிமிரும் ரஜினி, சரியும் எடப்பாடி, வெளிரும் விஜயகாந்த்..!!
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை தமிழகத்தில் அரசியல் சூழலும், மக்கள் அரசியலை அணுகும் முறையும் வேறு மாதிரி இருந்தது. ஆனால் 2016ம் வருடத்திய தேர்தலில் இருந்து இதில் ஆகப்பெரியமாற்றம் உருவாகி இருக்கிறது. அது ‘முதல்வர் வேட்பாளர் யார்?’ என்கிற கான்செப்ட்தான். இப்படி ஒரு டிரெண்டை உருவாக்கியது மோடிதான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ‘பிரதமர் வேட்பாளர்’ என்கிற அடைமொழியுடனேயே பிரச்சாரத்தில் முன் நிறுத்தியது தேசிய பா.ஜ.க. அந்த யுக்தி வெகுவாக கைகொடுத்தது.
இந்த வெற்றி ஃபார்முலாவை கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகமும் ஃபாலோ செய்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் அதன் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா தான் என்பது சொல்லி தெரியவேண்டியதாக இல்லை.
அதனால் வெகு எளிதாக முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரையில் இந்த கேள்வியால் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது உட்கட்சி. ஸ்டாலினை இப்படி அறிவிக்க கருணாநிதிக்கு மனது வரவில்லை, கழகம் ஜெயித்தால் முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பேன் என முன்வரவுமில்லை.
ஸ்டாலினை பொறுத்தவரையில் ‘கழக முதல்வர் வேட்பாளர் இவரே’ என்று ஒருவரை அடையாளப்படுத்துவது அவசியம் என்று போராடிப் பார்த்து தந்தையிடம் தோற்றார். அந்த தேர்தலில் கட்சி தோற்பதற்கு அதுவும் ஒரு பெரும் காரணம் என்றார்கள்.
மக்கள் நல கூட்டணியை பொறுத்தவரையில் தே.மு.தி.க. இணையும் வரையில் முதல்வர் வேட்பாளர் என்கிற கான்செப்டை பற்றி பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள் என்று சொல்லி அமைதி காத்தனர். தே.மு.தி.க. இணைந்தபின் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக உயர்த்திப் பிடித்தனர்.
ஆனால் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ‘நான் எம்.எல்.ஏ.வானால் இந்த உடுமலைப்பேட்டை தொகுதிக்கு நிறைய செய்வேன்.’ என்று விஜயகாந்த் வழக்கம்போல் வாய் குழறியபோது இவரா நம் முதல்வர் வேட்பாளர் என்று ம.ந.கூட்டணி வெறுத்தது.
இப்படி கடந்த தேர்தலில் கழகங்களை போட்டுப் புரட்டிய ‘முதல்வர் வேட்பாளர்’ கான்செப்ட் இதோ, தேர்தலுக்கு நியாயப்படி இன்னும் நான்கு வருடங்கள் இருக்கும் நிலையில் இப்போதே அதிர்வை கிளப்ப துவங்கிவிட்டது. இந்த கான்செப்டை வைத்து ‘யார் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்புகிறீர்கள்...?’ என்ற கேள்வியுடன் செம சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறது தனியார் சேனல் ஒன்று.
மக்களுக்கும் இது பெரிய அபத்தமாக தோன்றவில்லை. காரணம், எடப்பாடி அரசிடமிருந்து பெரும்பான்மை எஸ்கேப் ஆனால் தேர்தலை சந்தித்தாக வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர குடுக்கையை ஏற்றுக் கொண்டார்கள்.
சர்வேயின் ரிசல்ட் இப்படியிருக்கிறது...
விஜயகாந்த் 01%
எடப்பாடி பழனிச்சாமி 04%
அன்புமணி 05%
ரஜினிகாந்த் 21%
பன்னீர் செல்வம் 23%
ஸ்டாலின் 38%
மற்றவர்கள் 08%
என்ன சொல்கிறது இந்த ரிசல்ட்?...
பேரதிர்ச்சியை பெறுவது தே.மு.தி.க.தான். ஒரு காலத்தில் 11%, 8%, 10% என்றெல்லாம் வாக்கு வங்கியை வைத்திருந்த தே.மு.தி.க.வின் தலைவரானவர் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழகத்தில் நூற்றில் ஒரேயொரு நபர் மட்டுமே சொல்கிறார் என்றால் அவரது மோசமான நிலையை எண்ணிப் பாருங்கள்.
யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது ஒரு வகையான ட்ரீட்மெண்ட். தன் உடம்பை குளிர வைக்க அந்த ஜீவன் செய்யும் தந்திரம் இது. ஆனால் விஜயகாந்த் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டிருப்பது கட்சியை குளிர அல்ல உறைய வைத்திருக்கிறது.
பிரேமலதாக்களும், பார்த்தசாரதிகளும், இளங்கோவன்களும் இனி நாவடக்கிவிட்டு கட்சியை கவனிக்கும் விஷயத்தில் இறங்கினால் இந்த 1% குறையாமல் இருக்கும்.
விஜயகாந்தை விட 3 சதவீதம் அதிகம் பெற்று 4% வாக்குகளை வாங்கியிருக்கிறார் எடப்பாடி. அவசர கதிக்கு சசிகலா பிடித்து வைத்த பொம்மைக்கு இப்படியொரு மரியாதை அதுவும் கட்சியின் சூழல் கண்டமாகி கிடக்கும் நிலையிலும் என்பது ஆச்சரியம் தருகிறது. அன்பு மணி 5% பெற்றிருப்பது உண்மையிலேயே அக்கட்சியினருக்கு உற்சாகம்தான். காரணம் சிட்டிங் முதல்வரை விடவும், அரசியலுக்கு வந்த சினிமாக்காரரை விடவும் அதிகம் பெற்றிருப்பதால்தான்.
பன்னீர் செல்வம் 21% வாக்குகளை வாங்கியிருக்கிறார். எடப்பாடிக்கும் இவருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பன்னீருக்கான விசுவாசத்துக்கு கிடைத்த மரியாதை. ஆனால் வெறும் அட்டைக்கத்தி மட்டுமே வீசிக்கொண்டிருந்தால் அடுத்தடுத்த சர்வேக்களில் அவர் விஜயகாந்துடன் போட்ட்போட வேண்டியிருக்கும்.
அரசியல்வாதியல்லாதா ரஜினிகாந்த் 23% வாக்குகளை பெற்றிருக்கிறார். இது உண்மையிலேயே பெரிய விஷயமே. அவரது பலம் அவரது ரசிகர்கள் மட்டுமே என்கிற நிலையை உடைத்து பொதுவெளியிலும் அவருக்கென்று ஒரு ஆதரவு இருப்பதை காட்டுகிறது. இந்த சூழலை எப்படி பயன்படுத்தப்போகிறார் என்பதை பொறுத்தே ரஜினியின் சாதுர்யத்தை நாம் எடைபோட முடியும்.
ஆனால் 38% வாக்குகளை பெற்று முன்னணியிலிருக்கிறார் ஸ்டாலின். இது தி.மு.க.வினரை குஷியாக்கி குதிக்க வைத்திருக்கிறது. ஓய்வில்லா உழைப்பு, கட்சியை ஒற்ற நபராய் தாங்கிப் பிடிக்கும் தன்மை, எதிர் கட்சி நபர்களிடமும் காட்டும் அரசியல் நாகரிகம், உண்மையிலேயே சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புவது, லஞ்ச புகாரில் சிக்காதது...அதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க.வின் தற்போதைய குழப்ப நிலை ஆகியன அவரை தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
இந்த நொடியிலிருந்து மிக சரியான அரசியல் மூவ்களை திட்டமிட்டு அவர் நடத்தினால் அவருக்கான ஆதரவு அரைசதத்தை தாண்டலாம். இல்லையென்றால் ரஜினிக்கும், பன்னீருக்கும் இடையில் அல்லாட வேண்டியிருக்கும்.
92% வாக்குகளை இவர்கள் பிரித்துக் கொள்ள மீதியிருக்கும் 8% வாக்குகளை சீமான், வைகோ, வாசன், காங்கிரஸ் கட்சி போன்றவர்கள் ’மற்றவர்கள்’ எனும் பெயரில் பிரித்துக் கொள்கிறார்கள்.
ஆபத்தான நபர் எனும் பட்டத்துடன் மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட வைகோ, சென்னை திரும்பிய இரவில் இந்த சர்வே ரிசல்ட் அவரை மேலும் எரிச்சலூட்டி இருக்கிறது. காரணம் அவரது பெயர் லிஸ்டிலேயே இல்லை.
தமிழர்களுக்காக உழைத்தால் இப்படியான வரம்தான் கிடைக்குமோ!