நான்காவது முறையாக சந்திக்க மறுத்த பிரதமர் மோடி !! யாரைத் தெரியுமா ?
கேரள மாநிலத்தின் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு, மாநிலத்துக்கான நிதி போன்றவைகள் குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் பினராயி விஜயன் 4 முறை நேரம் ஒதுக்கக் கேட்டும் அவரை சந்திக்க மோடி மறுத்துவிட்டார்.
கேரள மாநிலத்துக்கான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சந்தித்துப் பேசுதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு இதுவரை தொடர்ந்து நான்கு முறைஅப்பாயின்ட்மெண்ட் தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி வழங்க மறுத்த பிரதம அலுவலகம், தேவைப்பட்டால் அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது.
கேரள மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது தொடர்பாக ஆலோசனையை மேற்கொள்ள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அனைத்துக்கட்சிகள் குழு பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்டிருந்தது.
ஆனால் அனுமதி மறுத்த பிரதமர் அலுவலகம், தேவைப்பட்டால் மத்திய உணவு, பொது விநியோகத்துறை மந்திரி ராம் விலாஸ் பாஸ்வானை சந்திக்கலாம் என கூறியுள்ளது.
கடந்த வாரம் கூட பிரதமரை சந்திக்க பினராயி விஜயன் நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தும் சந்திக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
கேரள மாநில முதல்வர் அலுவலக தகவலின்படி பிரதமரை சந்திக்க ஜூன் 16 மற்றும் 21-ம் தேதிகளில் நேரம் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் அலுவலகம் அதனை நிராகரித்துள்ளது.
முன்னதாகவும் பிரதமர் அலுவலகம் கேரள மாநில அனைத்துக் கட்சி குழுக்களுக்கு அனுமதியை மறுத்தது. இதே போல் கடந்த 2017 ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆகிய தேதிகளிலும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கக் கேட்டும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.