பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை.. ‘லதா மங்கேஷ்கர்’ மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்..
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரைத் தொடர்புக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பியவர் லதா மங்கேஷ்கர்.
இந்திய கலாசாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக எதிர்காலத்தில் நினைவுக்கூறப்படுவார். லதா மங்கேஷ்கரின் மெல்லிய குரல் மக்களை மயக்கும் ஈடு இணையற்ற திறனைக் கொண்டிருந்தது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் சாதனைகள் யாரோடும் ஒப்பிடமுடியாதவில்லை என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் செல்லக்குரலாக திகழ்ந்தவர். லதா மங்கேஷ்கரின் தங்க குரலுக்கு அழிவேதும் இல்லை. ரசிகர்களின் மனதில் எப்போதும் லதா மங்கேஷ்கரின் குரல் எதிரொலித்து கொண்டே இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தன்னுடைய இரங்கல் செய்தியில், “இந்தியாவின் இசைக்குயில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் கொடிகட்டி பறந்த செல்வி. லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அம்மையாருக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கும், இசைத் துறையினருக்கும் எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.