தவறு செய்தவர்கள் பெரிய இடத்து பிள்ளைகளாக இருந்தாலும் சும்மா விடக்கூடாது.. சிபிஐக்கு டிடிவி அதிரடி கோரிக்கை.!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விரைவாகச் செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விரைவாகச் செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்ததால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் சென்றது. இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு ஆகிய 3 பேரை பொள்ளாச்சியில் நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த 3 பேரையும், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அருளானந்தம் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ளார். அதேசமயம், இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பேர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.
அப்பாவிப் பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.