கமலாலயத்தில் உள்ளடி அரசியல்..! அண்ணாமலை பதவிக்கு குழி பறிக்கும் சீனியர்கள்!
பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்து மத்திய அமைச்சரானார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவரான தமிழிசை தெலுங்கானா ஆளுநராகியிருக்கிறார். தற்போது சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியிருக்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே கட்சியின் சீனியர் தலைவர்கள் பலர் அவருக்கு எதிராக மிகத் தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக கூறுகிறார்கள்.
கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே தமிழகத்தில் பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்பெல்லாம் தலைவராக யாரை தேர்வு செய்வது என்று ஒரு சிலருக்குள் பேசி முடித்துக் கொள்வார்கள். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக இருந்து மத்திய அமைச்சரானார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவரான தமிழிசை தெலுங்கானா ஆளுநராகியிருக்கிறார். தற்போது சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியிருக்கிறார்கள்.
இதனால் தமிழக பாஜகவிற்கு தலைவராகிவிட்டால் போதும் நிச்சயம் மத்திய அமைச்சர் பதவி அல்லது ஆளுநர் பதவி உறுதி என்பது போல் ஆகிவிட்டது. இதனால் அந்த பதவிக்கு ஏற்கனவே ஆசையில் இருந்த பலர் தீவிர ஆசையில் இருக்கின்றனர். எல்.முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்ட நிலையில் கட்சியின் சீனியர்கள் இருவர் டெல்லியில் முகாமிட்டு தலைவர் பதவிக்கு காய் நகர்த்தினர். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த ஒருவரும் தமிழகத்தில் இருந்தபடியே தனது தொடர்புகளை ஆக்டிவேட் செய்திருந்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கட்சியில் சேர்ந்து ஓராண்டு கூட நிறைவடையாத அண்ணாமலைக்கு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த தகவல் வெளியான உடன் பாஜக சீனியர்கள் சிலர் அவுட் ஆப் ரீச்சபிள் ஆகிவிட்டனர். கட்சிக்கு பல வருடங்களாக உழைத்த தங்களை விடுத்து புதியவருக்கு இப்படி ஒரு பதவியா என்று பொறுமித்தள்ளிக் கொண்டிருந்தனர். அத்தோடு ஊடகங்களில் தங்களுக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி அண்ணாமலைக்கு எதிர்ப்பு என்பது போல் தகவல்களையும் பரப்பினர்.
ஆனால் அண்ணாமலை திட்டமிட்டபடி தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுவிட்டார். இதனிடையே செல்லும் இடங்களில் எல்லாம் அவர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதே போல் முக்கிய ஊடகங்களுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். இதில் சில விஷயங்கள் சர்ச்சையாகிவிடுகின்றன. அவற்றை எல்லாம் தோண்டி எடுத்து அண்ணாமலைக்கு எதிராக டெல்லிக்கு அனுப்பும் பணிகளை இருவர் செய்து வருவதாக கூறுகிறார்கள். மேலும் நிர்வாகிகள் நியமனம் விவகாரத்தில் அண்ணாமலைக்கு போதுமான ஒத்துழைப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.
இதனிடையே அண்ணாமலை சென்னையில் இருந்து அரசியல் செய்வதை விட களத்தில் இருந்து அரசியல் செய்யவே விரும்புகிறார். இதனால் ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் கட்சியின் தலைமையிடமான கமலாலயத்திற்கு அவர் அடிக்கடி வருவதில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு கமலாலயம் வரும் சீனியர் தலைவர்கள் இருவர், அண்ணாமலையை எப்படி கவிழ்க்கலாம் என்று அங்கேயே சதி ஆலோசனை செய்வதாகவும் இதற்கு ஊடகங்களுடன் மிக அதிக தொடர்பில் இருப்பதாக காட்டிக் கொள்ளும் நபர் உதவி செய்து வருவதாகவும் கூறுகிறார்கள்.