பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவு..! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்த நிலையில் அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழ்ந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன் என கூறியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மாண்புமிகு பிரதமரின் தாயார் திருமதி ஹிராபா மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக கூறியுள்ளார். அதிமுக சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்கள்களை பிரதமர் மோடிக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் உண்மையில் போதுமானதாக இருக்காது என்றாலும் இந்த கடினமான சூழ்நிலைகள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார். ஆழ்ந்த துக்கமான இந்த நேரத்தில், எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தாயே நாளை காலை கதிரவனும் இவ்வாறே உதிப்பானா?
தாயே சொல் உணர்வுகள் அத்தனையும் இழந்து சூனியமாய் கிடக்கிறேன்... இடிந்தன கனவுகள் என்ற தலைப்பில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் கவிதை. அன்னையின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால், அவரை இதயத்தில் வைத்து பூஜித்த பெருமகன் நம் பிரதமர். வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருந்த நம் பாரதப் பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி, இதயத்தில் பேரிடியாக இறங்கியது.அன்னையை ஆன்ம தத்துவமாக வழிபட்ட நம் பிரதமருக்கு காலம் ஆறுதல் கூறட்டும்... மறைந்த அன்னையின் ஆன்மா இறை நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும்... தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை பணிவான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீராபென் மோடி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். பிரதமர் மோடியின் -யின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அவரது தாயார் தார்மீக பலமாக திகழ்ந்தார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும் பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் கவிதையில் ஒரு பிரதமரைப் பெற்றிருக்கிறோம் என்று பெற்றபோது தெரியாது அன்னைக்கு, பிரதமரின் தாய் என்ற பெருமையோடு மறைந்திருக்கிறார். இன்றைக்கு அந்த அம்மையார் இந்தியக் கலாசாரத்தின் தாய்வடிவம் ஆவார் பிரதமர் அவர்களே! அன்னைக்கு எங்கள் அஞ்சலி;தங்களுக்கு எங்கள் இரங்கல் அன்னையார் அமைதி கொள்க என கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
கண்ணீர்மல்க தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி - கண்கலங்க வைக்கும் வீடியோ இதோ