விவசாயியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.
விவசாயி அளித்த தாக்குதல் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத வடமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விவசாயி அளித்த தாக்குதல் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத வடமதுரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், எஸ். புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மாலை, தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல், அரிவாளால் தாக்கியது.
காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தங்கராஜ், வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த அப்போதைய உதவி ஆய்வாளர் பிரேம்சந்திரன், குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு உடன்பட மறுத்ததால் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்து விடுவதாக உதவி ஆய்வாளர் மிரட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் விவசாயி தங்கரஜ் புகார் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை. ஜெயச்சந்திரன், புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சமாதானமாக செல்லும்படி காவல் துறை உதவி ஆய்வாளர் மிரட்டிய சம்பவம் என்பது மனித உரிமை மீறல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட தங்கராஜுக்கு 50 ஆயுரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும், புகார் மீது வழக்குப்பதிவு செய்யாத வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பிரேம்சந்திரனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கு ஆணைய உறுப்பினர் பரிந்துரைத்துள்ளார்.