PMK: ஒன்றியத்துக்கு 1000 பேர்… பாமக புது பிளான்… கட்சியினருக்கு ரூட் போட்டு கொடுத்த ராமதாஸ்…
2026ல் அன்புமணியை தமிழகத்தின் முதலமைச்சராக்கும் பொருட்டு கட்சியினருக்கு என்று சில திட்டங்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வகுத்து கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: 2026ல் அன்புமணியை தமிழகத்தின் முதலமைச்சராக்கும் பொருட்டு கட்சியினருக்கு என்று சில திட்டங்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வகுத்து கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வட மாவட்டங்களில் செல்வாக்கை கொண்டுள்ள பாமகவின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் மற்ற கட்சிகளை காட்டிலும் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களையோ, தொண்டர்களையோ நேரடியாக சந்திக்காத தலைமை, முதல் கட்ட தலைவர்களே தலைமையை சந்திக்க முடியாத சூழல் என்ற பேச்சு ஓடிக் கொண்டு இருக்கிறது.
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அக்கட்சியின் எம்பி அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளாமல் இருப்பது தனி டிராக்கில் விமர்சனம் ஆகி வருகிறது. ஜெய்பீம் சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்ட தருணத்தில் கட்சியினரின் செயல்பாடுகள் போதிய திருப்தியை தராத வகையில் இருப்பதாக ராமதாஸ் கருதுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
குறிப்பாக 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கிய பாமகவின் பயணத்தை இப்போதே டாக்டர் ராமதாஸ் தொடங்கி விட்டதாக தெரிகிறது. அது குறித்து தான் மாவட்ட செயலாளர்கள் நியமனம், கட்சியினருக்கு கட்டளைகள் என செயல்கள் வேகம் எடுத்துள்ளன.
அதிலும், மிக முக்கியமாக மக்களுக்கும், கட்சிக்கும் இடையே விழுந்த இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய செயல்திட்டத்தை கையில் எடுத்து அதற்கான அறிவிப்பையும் ராமதாஸ் வெளியிட்டு உள்ளார். இது குறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அது தான் மக்களை சந்திப்போம்…. மக்கள் ஆதரவை வெல்வோம் என்ற தலைப்பில் பாமகவினருக்கு ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தமது கட்டளையை மாவட்ட செயலாளர்கள் பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்றும், இன்னும் சில மாவட்ட செயலாளர்கள் அதை விரைவில செயல்படுத்துவார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும், மக்கள் சந்திப்பை பலமாக்குகள், அவர்களின் வீடுகளில் சென்று தங்கி, சாப்பிட்டு ஆதரவை பெற வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த கடிதம் குறித்து பல்வேறு விஷயங்களை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள்.
குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் மற்ற கட்சிகளுக்கும் தொண்டர்களுக்கும் இருக்கும் இணைப்பை போல, பாமக கட்சி தலைமைக்கும், தொண்டர்களுக்கு நேரடி தொடர்பு என்பது இல்லாமல் போய்விட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாசை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் முக்கிய தலைவர்களினாலே சில நேரம் சந்திக்க முடியாமல் போவதாகவும் தெரிவிக்கின்றனர். கட்சி தலைமையை எளிதில் அணுக முடியாத ஒரு சூழல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.
கட்சியினர் மத்தியில் நிலவும் சுணக்கம், பாமக ஓட்டு வங்கி, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் என அனைத்தையும் கணக்கிட்டு மக்கள் சந்திப்பு என்ற திட்டத்தை ராமதாஸ் கையில் எடுத்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கடந்த கால அரசியல் நிகழ்வுகளில் பாமகவின் திண்ணை பிரச்சாரம் கட்சியினரை மனரீதியாக பலப்படுத்தியதோடு, வாக்கு அரசியலுக்கும் கை கொடுத்துள்ளது. ஆகவே, தான் மக்கள் சந்திப்பு என்ற நிகழ்வோடு, இரு சக்கர வாகன பேரணி என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பாக, கட்சி அமைப்பு ரீதியாக ஒன்றியங்களில் பேரணியை நடத்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். பாமகவின் அமைப்பு ரீதியில் ஒன்றியம் என்பது கிட்டத்தட்ட 25 கிராமங்களை உள்ளடக்கியது.
இந்த ஒவ்வொரு ஒன்றியத்திலும் 1000 பேராவது இருசக்கர வாகனங்களில் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும், சாதனைகளை கூற வேண்டும் என்று ராமதாஸ் குறிப்பிட்டு இருக்கிறார், இது கடந்தகால அரசியலில் கை கொடுத்த திண்ணை பிரச்சாரத்தின் மறுவடிவம் என்கின்றனர் அரசியல் அறிந்தவர்கள்.
அதனால் ஒன்றியங்கள் அளவில் ஏற்பாடு செய்யப்படும் வாகன பேரணிக்கு நானே தலைமையேற்க வருவேன், பேரணியை தொடங்கி வைப்பேன் என்று ராமதாஸ் கூறி உள்ளார் என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். பாமகவினரிடையே ஒரு உந்துதலை ஏற்படுத்தி மக்களிடையேயும், கட்சியினர் இடையேயும் ஏற்பட்டுள்ள இடைவெளியை முதல் கட்டமாக சரி செய்ய வேண்டும் என்பது தான் இதன் முதல் திட்டம் என்று முக்கிய நிர்வாகிகள் பலர் கூறி உள்ளனர். 2026ல் அன்புமணி தமிழகத்தின் முதல்வர் என்ற முழக்கத்துடன் பாமகவினர் களப்பணிக்கு தயாராகி வருகின்றனர்…!