திமுகவில் வீசிய புயல்... பொதுக்குழுவில் ஸ்டாலினுக்கு எதிராக பேசிய திமுக முன்னாள் அமைச்சர்..?? புட்டு புட்டு வைக்கும் ராமதாஸ்..!!
”சுயசரிதை புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நூலை வெளியிடுவதற்காக முயற்சிகளில் அவரது மகன் வீரபாண்டி ராஜா முயன்றார். ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்த திமுக தலைமை அந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது.
சேலத்தில் நேற்று (17.11.2019) காலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும், அமைச்சரும், சேலத்து சிங்கம் என்று அழைக்கப்பட்டவருமான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் எழுதிய ‘‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’’ என்ற தலைப்பிலான அவரது வாழ்க்கை வரலாற்று நூலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் 7 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரது ஏழாவது நினைவு நாள் வரும் 23-ஆம் தேதி கடைபிடிக்கப்படவிருக்கும் நிலையில், மிகவும் தாமதமாக இப்போது தான் வெளியிடப்படுகிறது.7 ஆண்டுகள் தாமதம் ஆனாலும், வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் வெளிவருவதற்கு யாரெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்களோ, அவர்களாலேயே இப்போது அந்த நூல் வெளியிடப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன் சிங்கத்தின் சீற்றத்துடன் எழுதப்பட்டிருந்த அந்த நூல், இப்போது வீரபாண்டியாரின் அடையாளங்கள் எதுவும் இல்லாத மிகச் சாதாரண நூலாக வெளியிடப்பட்டிருப்பது தான் மிகவும் வருத்தமளிக்கிறது."காரணம் என்ன?" வீரபாண்டி ஆறுமுகம் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் எழுதியது எனக்கு தொடக்கத்திலிருந்தே தெரியும். அவருக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்படுவதற்கு காரணமே 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை தான். திமுகவில் மு.க.ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க தாம் புறக்கணிக்கப்படுவதாக அவர் உணர்ந்தார். இதனால் மு.க. அழகிரியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார். அத்தகைய சூழலில் தான் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘‘கலைஞர் இருக்கும்போது அடுத்த தலைவர் தேவையில்லை. கலைஞரின் பிள்ளைகளான மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் நமக்கு ஒன்றுதான். சிலர் கலைஞரை தங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க நிர்ப்பந்திக்கின்றனர். ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது’’ என்று ஸ்டாலினை முன்னிறுத்த வீரபாண்டி ஆறுமுகம் எதிர்ப்புத் தெரிவித்தார்."பொதுக்குழுவில் அமளி"அதனால் ஆத்திரமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். அங்கு நடந்த அநாகரிகமான நிகழ்வுகளைக் கண்டு கலைஞர் கண்ணீர் வடித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளை கண்டித்த அவர், பேச மறுத்து விட்டார். அப்போது ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தான், அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கிய வீரபாண்டியார், தமது வாழ்க்கை வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார். நூலின் பெரும்பகுதியை பெங்களூருவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி தான் வீரபாண்டியார் எழுதினார். பல அத்தியாயங்கள் பெங்களூருவில் தான் எழுதப்பட்டன. ஒரு சில அத்தியாயங்கள் மட்டும் தான் பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் எழுதப்பட்டன. 2012-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தமக்கு எதிராக ஸ்டாலின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை குறித்தும் வாழ்க்கை வரலாற்று நூலில் வீரபாண்டியார் விரிவாக பதிவு செய்திருந்தார். இதுகுறித்த விவரங்களையும் ஒரு தருணத்தில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். ஆனால், இந்த விவரங்களும் வீரபாண்டியாரின் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"வெளியிடத் தடை"சுயசரிதை புத்தகத்திற்கு இறுதி வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பயனின்றி உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அந்த நூலை வெளியிடுவதற்காக முயற்சிகளில் அவரது மகன் வீரபாண்டி ராஜா முயன்றார். ஆனால், அதில் மு.க.ஸ்டாலின் பற்றிய விமர்சனங்கள் இடம் பெற்றிருப்பதை அறிந்த திமுக தலைமை அந்த புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதுகுறித்து மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போதே நான்குற்றஞ்சாட்டியிருக்கிறேன்.
இப்போதும் வீரபாண்டியார் மீதான அன்பு காரணமாக இந்த நூல் வெளியிடப்படவில்லை. அந்த நூலின் மூலப்பிரதி கடந்த 7 ஆண்டுகளாக வீரபாண்டியாரின் உதவியாளரான செங்கோட்டையன் என்பவர் வீட்டில் தான் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது வேறு சில நெருக்கடிகள் காரணமாகத் தான், திமுக தலைமை மீதான சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட்டு, இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. வீரபாண்டியார் எழுதிய கருத்துகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தால் இந்த நூல் சிங்கத்தின் வரலாறாக இருந்திருக்கும். ஆனால், அந்த நூலில் இருந்த பல முக்கிய கருத்துகள் இப்போது சிதைக்கப் பட்டு இருக்கின்றன. இதனால் அந்த நூல் அதற்குரிய மதிப்பை இழந்து விட்டது என்பதே உண்மை . இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.