மீண்டும் தருமபுரியில் களம் இறங்கும் அன்புமணி !! பாமக வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு !!
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 5 தொகுதிகளின் வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தருமபுரியில் களம் இறங்குகிறார்.
வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக,தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக தான் போட்டியிடும் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி தருமபுரியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், விழுப்புரம் தொகுதியில் வடிவேல் ராவணணும் போட்டியிடுகின்றனர்.
கடலூர் தொகுதியில் கோவிந்தசாமி, அரக்கோணத்தில் ஏ.கே.மூர்த்தி, மத்திய சென்னை தொகுதியில் பாமக தகவல் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் சாம் பாலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.