இன்பம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்..! தமிழில் வாழ்த்திய பிரதமர் மோடி..!
அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்
Tamil Nadu, First Published Apr 14, 2020, 9:00 AM IST
இந்தியா முழுவதும் கொரோனாவின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து மக்களை வீடுகளுக்குள்ளேயே முடக்கிப் போட்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதியான இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் புத்தாண்டு பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் சித்திரை முதல் நாளான இன்று தமிழ்ப்புத்தாண்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனாவின் பாதிப்பால் மக்கள் கோவில்களுக்கு செல்லாமல், பொது இடங்களில் கூடாமல் தங்கள் வீடுகளிலிருந்து தமிழ் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது ட்விட்டர் பதிவில், ’அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன்.எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அதே போல விஷு பண்டிகை கொண்டாடும் மலையாள மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு இறுதி நாளை எட்டியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று காலை 10 மணியளவில் மீண்டும் உரையாற்ற இருக்கிறார். அப்போது இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated Apr 14, 2020, 9:00 AM IST