கச்சா எண்ணெய் விலையேறல... ! ஆனா உயரும் பெட்ரோல், டீசல் விலை... காரணம்தான் என்ன?
இந்தியாவில் பெட்ரோல் விலை பற்றிய விவாதங்களில் அனல் பறக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? இந்தியாவில் பெட்ரோலின் விலை அதிகமாக இருப்பது தொடர்பாக பிரதமரும், மத்திய அரசும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் விலை உயர்வு பற்றிய சமாதானங்களை சொல்ல முற்பட்டாலும், எதிர்கட்சிகளின் தாக்குதலையும் மக்களின் ஏமாற்றத்தையும் மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் மத்திய அரசின் வரி விதிப்புதான், பெட்ரோல் விலை அதிகரிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஜிஎஸ்டிஎன் குழுவின் தலைவராக இருக்கும் சுஷில் குமார் மோடி, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுவந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது, சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மே 13 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. லிட்டர் பெட்ரோல் ரூ.81.11 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 72.91 ஆகவும் விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் இதே விலையில் கிடைப்பதில்லை. மாவட்டத்திற்கு மாவட்டம் ஒரு விலையில் விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களின் விலையும் அதிகரிப்பதால் மக்களின் வாழ்வியல் மேலும் சிக்கலாகிறது. ஏழை எளிய மக்களின் வாழ்வு இதனால் பாதிக்கபடுகிறது.
மத்திய அரசின் வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவராமல் பெட்ரோல் டீசல் விலையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியவில்லை