கடந்த ஒரு வருஷத்தில பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா? அதிர்ச்சி தகவல் …
15 நாட்களுக்கு ஒரு முறை என்று இருந்த நடைமுறை மாற்றப்பட்டு தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை தொடங்கிய முதல் ஓராண்டில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 ரூபாயும், பெட்ரோல் ஒன்றுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 16 முதல் டீசல்,பெட்ரோலுக்கு தினமும் விலை மாற்றம் செய்யும் நடைமுறை மத்திய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டது. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட்ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது.
ஓராண்டுக்குப் பிறகு தற்போது டீசல் விலை ரூ.71.25, பெட்ரோல்விலை ரூ.78.18 என உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணைய் பேரலுக்கு 147 டாலராக விலை உயர்ந்த போதும்கூட டீசலுக்கு ரூ.64.50 ஆகவே இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 65.74 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் டீசல் விலை ரூ.71.25 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
2015 முதல் கச்சா எண்ணெய் விலை 30 டாலராக குறைந்த போதும்கூட அதன்பலனை மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு சுங்கவரியைக் உயர்த்தியும், எண்ணெய் நிறு வனங்களின் லாப விகிதத்தை உயர்த்தியும் மக்களிடம் கொள்ளையடித்தது.
மோடி அரசு அதிகாரத்திற்கு வருவது வரை, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலுக்கு 3.46 ரூபாயும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.48 ரூபாயும் சுங்கவரியாக வசூலித்து வந்தது. மோடி அரசோ கச்சா எண்ணெய் விலை குறைவுக்கு ஏற்ப சுங்கவரியை உயர்த்தியது. அதன் விளைவாக டீசல் மீதான வரி ரூ.3.46 யிலிருந்து ரூ.17.33ஆகவும், பெட்ரோல் மீதான வரி ரூ.9.48 யிலிருந்து ரூ.21.48ஆகவும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து சில வட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வந்தபோது ரூ.2 வரியை குறைத்தனர். அதுபோல் கடந்த மாதம் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது தொடர்ந்து 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.
கச்சா எண்ணெய் விலை குறைவால் லாப விகிதம் குறைந்துவிட்ட தாக எண்ணெய் நிறுவனங்கள் கூறின. உடனடியாக எண்ணெய் நிறுவனங்களின் லாப விகிதம் 10லிருந்து 16 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் மக்கள் எந்தவகையிலும் நிவாரணம் பெறமத்திய பாஜக அரசு உதவவில்லை.