முதல்வர் பேசி 24 மணி நேரம் கூட ஆகல.. அதுக்குள்ள இப்படியொரு சம்பவம்.. தெறிக்கவிடும் டிடிவி.தினகரன்..!
இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி. காவல்துறையினர் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அடுத்துள்ள பெரியக்குப்பத்தில் நாகார்ஜூனா தனியார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் ஆலையில் இரும்பு பொருள்களை திருடி லாரி, மினி லாரி போன்றவற்றில் எடுத்து சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து ஆலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் ஆலை பகுதியில் புதுச்சத்திரம் போலீசார் மற்றும் அந்நிறுவனத்தின் பாதுகாவலர்கள் ரோந்துப்பணியில் இருந்துள்ளனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் சுமார் 20 பேர் கொண்ட கும்பல் திருட வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில், 6 பெட்ரோல் குண்டுகளில் 3 பெட்ரோல் குண்டுகள் வெடித்துள்ளது. இதில், அதிருஷ்டவசமாக யாருக்கும் காயமின்றி தப்பித்தனர். இந்நிலையில், இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது முதலமைச்சர் பெருமையாக பேசி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி. காவல்துறையினர் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.