தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. ரூ.971 கோடியில் கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டுமானம், 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி கடந்த 26-ஆம் தேதி இரவு, பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி, ஒரு மணி நேரம் வரை அங்கிருந்தார். 
இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த ஆய்வை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. கொரோனா அலைகளின் போது ஏதாவது மருத்துவமனை அல்லது ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்துக்கு சென்றீர்களா என்று பிரதமர் மோடியை அக்கட்சி கேள்வி எழுப்பியது. இதற்கிடையே தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ட்விட்டரில் பிரதமர் மோடியின் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை புகைப்படத்தை பதிவிட்டு, “சொல்வதற்கு ஒன்றுமில்லை. நமக்குத் தகுதியான அரசே நமக்கு கிடைக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

பீட்டர் அல்போன்ஸ் பகிர்ந்த அந்தப் படத்தில் பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு இருப்பது போல இருந்தது. இந்தப் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களின் ட்வீட் மூலம் பொய்களைத் திணிப்பதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா? 
உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப போலி செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள் என்றாலும் நம்முடைய பிரதமர் மற்றும் தமிழக பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது” என்று அண்ணாமலை காட்டமாகத் தெரிவித்துள்ளார். அதோடு போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தையும் உண்மையான புகைப்படத்தையும் அண்ணாமலை இணைத்துள்ளார்.