பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்து உத்தரவிட்ட முதலமைச்சர் !!
பெட்ரோல், டீசல் விலையில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் மகாராஷ்ரா முதலமைச்சர் பட்னவிஸ் மேலும் 2 ரூபாய் 50 காசுகள் குறைத்து மொத்தம் 5 ரூபாய் குறைவாக விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் அதில் இணைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தலைமையில் ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, வர்த்தக பற்றாக்குறை தொடர்பாக மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாகவும் பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாயும், மத்திய அரசு கலால் வரியில் 1.50 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதையடுத்து மத்திய அரசு அறிவித்த 2 ரூபாய் 50 பைசாவுடன் மாநில அரசு அறிவித்த 2 ரூபாய் 50 காசுகள் என மொத்தம் 5 ரூபாய் குறைக்க இரு மாநில முதலமைச்சர்களும் உத்தரவிட்டுள்ளனர்.