வயலில் இறங்கி மந்திரம் சொன்னால் நெல் விளைச்சல் அதிகரிக்கும்! அமைச்சரின் அதிரடி அட்வைஸ்….
விவசாயிகள் வயல்வெளியில் நின்றபடி, தினமும் அரைமணி நேரம், வேத மந்திரங்களை ஓதினால் போதும், விளைச்சல் பிச்சுக்கொட்டும் என கோவா மாநில விவசாயத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியுள்ளார். இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜக கூட்டணி கட்சியான, கோவா முற்போக்கு கட்சியின் விஜய் சர்தேசாய், விவசாயத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், கோவாவிலுள்ள, ‘சிவ யோகா பவுண்டேஷன்’ என்ற அமைப்பு, தனது ‘அண்டவெளி விவ சாயம்’ என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தி வைக்குமாறு, அமைச்சர் விஜய் சர்தேசாயை அழைத்துள்ளது. அவரும் வயலுக்கே சென்று இந்தவிவசாய முறையைத் துவக்கி வைத்துள்ளார்.
அப்போது, ‘அண்டவெளி விவசாயம்’ என்றால் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று,30 நிமிடங்கள், வேத மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும்; அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால்,நெற்பயிர்கள் அமோக விளைச்சல் கொடுக்கும்; இதுதான் அண்டவெளி விவசாயம்’ என்று தானொரு அமைச் சர் என்பதையும் மறந்துவிட்டுப் பேசினார்.
அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை; அவை, ரசாயன உரங்கள் கலக்காமல், நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும்’ என்றும் விவரித்து இருக்கும் அவர், இதற்கு, சிவயோக விவசாயம் என்றும் மற்றொரு பெயர் இருப்பதாகவும், இந்த சிவயோக விவசாயம்தான், எதிர்காலத்தில் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்று சீரியஸாக தெரிவித்தார்.
கோவா அமைச்சரின் இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.