நிலோபர் கபிலை புறக்கணித்த பொதுமக்கள் - கட்சியினர் மட்டும் பங்கேற்பு
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் முதலமைச்சராக பதவியேற்றார்.
அவருடைய புதிய அமைச்சரவையில் இரண்டாவது முறையாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்கள் பதவியேற்றார்.
பதவியேற்றபின்னர் முதன் முறையாக தன்னுடைய சொந்த தொகுதியான வாணியம்பாடிக்கு சென்னையில் இருந்து ஜெ.பிறந்தநாளான பிப்.24 அன்று சென்றார்.
அவரை வரவேற்க அதிமுகவினர் மேள தாளத்துடன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆனால் அங்கு பொதுமக்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமே வரவேற்பில் இருந்தார்கள்.
பின்னர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணியாக மேளதாளங்களுடன் நடந்து சென்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு அமைச்சர் நிலோபர் கபில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு மீண்டும் நடந்தே பேரணியாக சென்றார். இதிலும் பொதுமக்களில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சந்தித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி சேலை வழங்கினார்.