P.chidambaram tweet Thanks to Gujarat elections
ஜி.எஸ்.டி. வரியின் குறைகளை மத்திய அரசுக்கு உணர்த்தி, அதனை குறைக்க வைத்த குஜராத் தேர்தலுக்கு நன்றி என்று, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.
2 நாட்கள் கூட்டம்
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, அவ்வப்போது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களை நடத்தி ஜி.எஸ்.டி. வரிகளை மத்திய அரசு மாற்றி வருகிறது. அந்த வகையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று வரை 2 நாட்கள் நடந்தது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைம தாங்கினார்.
அதிரடி மாற்றம்
இதில் கலந்து கொண்ட அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஜி.எஸ்.டி. வரியை மாற்றி அமைப்பது குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையே குஜராத்தில் தேர்தல் என்பதால் அம்மாநிலத்திற்கு சாதமாக அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஜவுளி வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக மோடி அரசுக்கு எதிராக நின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஜவுளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தலுக்கு நன்றி
இந்நிலையில் ஜி.எஸ்.டி. அறிவிப்புகள் வெளி வருவதற்கு முன்பாக டுவிட்டரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது-
குஜராத் தேர்தலுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏனென்றால், அந்த தேர்தல்தான் எதிர்க்கட்சிகள், பொருளாதார வல்லுனர்களின் பேச்சை மத்திய அரசு கேட்கும்படி செய்துள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு விவாதத்தை தவிர்த்தது. ஆனால் மக்கள் மன்றத்திலும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் விவாதத்தை மத்திய அரசால் தவிர்க்க முடியவில்லை.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சிறப்பான மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது மத்திய அரசு அச்சத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி. வரியை மாற்றியமைப்பதை தவிர்த்து மத்திய அரசுக்கு தற்போது வேறு வழியே இல்லை. இவ்வாறு டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.
