ஹரி நாடாரை தூக்கி பந்தாடிய ராக்கெட் ராஜா.. வீதிக்கு வந்த பனங்காட்டு படை பாலிடிக்ஸ்.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஹரி நாடார், வாயை கொடுத்து இப்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளார். கடந்த ஆட்சியில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தாலும் அப்போது அது கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த வழக்குகள் தூசிதட்டி எடுக்கப்பட்டு விசாரணை வேகம் எடுத்துள்ளது.
பனங்காட்டு படையிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்துள்ளார். இனி அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவரின் கருத்துக்கோ, செயலுக்கோ கட்சி பொறுப்பேற்காது என்றும் ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மற்றவர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்ட விரும்புபவர்கள் தனது தோற்றத்தை வித்தியாசமாக மாற்றுவார்கள், இல்லையெனில் தனது தனித்திறமையை வளர்த்துக் கொள்வார்கள், அந்த வகையில் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு பந்தாவாக வலம் வந்தவர்தான் ஹரி நாடார். சரம் சரமாக நகைகளை அணிந்து கொண்டு நாடார் என கழுத்தில் பட்டையாக போர்டு மாட்டிக் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவந்தார் இந்த ஹரி நாடார். நடமாடும் நகைக்கடை என பலராலும் அழைக்கப்பட்டு வந்த இவர்தான் இப்போது ஹாட் டாபிக். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பனங்காட்டு படை மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளியதால் ஹரிநாடாரின் அரசியல் செல்வாக்கு உயர்ந்தது. ஹரி நாடார் என்றால் வெள்ளை ஜிப்பா, நீண்ட கூந்தல், சரம் சரமாக நகைகளை அணிந்திருப்பார் என்பதுதான் அவரது இமேஜ்.
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தை குளத்தை சேர்ந்த ஹரி நாடார் சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி சென்னை வந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்த அவர், பிறகு தனியாக தொழில் ஆரம்பித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். நாடார் சமூக தொழிலதிபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பின்னர் காலப்போக்கில் தொழில் அதிபராக உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கிய அவர் பலமுறைகேடுகள் செய்தே முன்னுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறினார் அவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 2வது இடத்திற்கு முன்னேறினார்.
அதன்பிறகு தன்னை பெரிய அரசியல் தலைவராக கருதத் தொடங்கிய ஹரி நாடார், பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது எனது இருந்து வந்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றவர்களையும் சகட்டுமேனிக்கு பேசிவந்தார் அவர். இந்நிலையில்தான் சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறிய ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் கொடுத்ததோடு, தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் ஹரி நாடாரை கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்தான் விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் மீண்டும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார், இந்நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொள்ளும் மலேசியாவில் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், ஹரி நாடார் கைது தொடர்பாக பரபரப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதாவது கடந்த 8 மாதங்களாக ஹரிநாடார் சிறையில் இருந்து வருகிறார், ஜாமினில் வெளியே கொண்டுவருவதற்காக போராடி வருகிறேன், விரைவில் எனக்கும் ஹரி நாடாருக்கும் திருமணமாக உள்ளது. நான் என்னை மனைவி என்று கூறிக்கொள்ள காரணம் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயே என்னை மனைவி என்றுதான் ஹரிநாடார் சொல்லி இருக்கிறார். அவரை காப்பாற்ற அவர் சார்ந்திருந்த பனங்காட்டு படை கட்சி உதவவில்லை, ஹரி நாடாருக்காக நான் மலேசியாவில் இருந்து வந்திருக்கிறேன்.
இதுவரை எனக்கு எந்த உதவியும் இங்கு கிடைக்கவில்லை, இது உண்மையிலேயே எனக்கு சோகமான நேரம், எமோஷனலாக நான் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பனங்காட்டு படை கட்சியிலிருந்து ஹரி நாடாரை நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளம் சேர்ந்த திரு அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின்படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கும், செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஹரி நாடார், வாயை கொடுத்து இப்போது வகையாக மாட்டிக் கொண்டுள்ளார். கடந்த ஆட்சியில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தாலும் அப்போது அது கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த வழக்குகள் தூசிதட்டி எடுக்கப்பட்டு விசாரணை வேகம் எடுத்துள்ளது. பைனான்சியர், திரைப்பட தயாரிப்பாளர், அரசியல்வாதி, நடிகர் என பல முகங்கள் அவருக்கு இருந்து வந்த நிலையில், இப்போது மொத்தத்தால் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று பலராலும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது கட்சியே அவரை தூக்கி எறிந்திருப்பது அதை உறுதி செய்வதாக உள்ளது.