பப்பு வேகாத குக்கர்... நொந்து போய் வெளியேறத் துடிக்கும் நிர்வாகிகள்... அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்..!
பணத்தை கொடுக்காமலேயே ஏமாற்றி விட்டார்களே என புலம்புவதோடு இனிமேலும் இங்கே இருந்து எந்தபலனும் கிடைக்காது என இடம்மாறுவதற்கும் தயாராகி வருகிறார்கள்.
அமமுகவிலிருந்து வலுவான கட்சிக்கு இடம் மாற தயாராக இருக்கிறார் டி.டி.வி.தினகரன் ஆத்ரவாளர்கள். அமமுக தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக முரசு இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. எப்போதும், முரசு தனியாக போட்டியிட்டாலும், பூத் செலவுக்கு கூட காசு வாங்காமல் தேமுதிக தொண்டர்கள் வேலை செய்வார்கள்.
ஆனால், இந்த முறை, குக்கர் கூட்டணி என்பதால் பணம் அதிக அளவில் கிடைக்கும் என முரசு தொண்டர்கள் காத்திருந்தார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர், அவரது சக்தியை மீறி 20 லட்சம் வரை செலவு செய்து இருக்கிறார். சிலர் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்கள். காரணம், தலைமை பணம் தரும் என நம்பி செலவு செய்தவருக்கு ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்து ஏமாற்றிய கதை ஆகிவிட்டது.
தலைமை கொடுக்கும் என காத்திருந்து, காத்திருந்து கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டதால் பூத் செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியவில்லை. இதனால், வந்தவாசி தொகுதி முழுவதும், தெள்ளார் கிழக்கு ஒன்றியத்தை தவிர மற்ற ஏரியா பூத்தில் குக்கர் ஏஜென்ட்களே இல்லை. இதில், பூத் செலவுக்கு காசு வாங்காமலேயே வேலை செய்கிற முரசு தொண்டர்களும், அமமுகவில் இருந்து பணம் வரும் என ஆசையாக காத்திருந்து ஏமாந்து விட்டார்கள். இதனால் செலவுக்கு பணம் தராமலேயே வேலை செய்த எங்கள் தொண்டர்கள் பணம் வரும் என ஆசையை காட்டி கெடுத்து விட்டார்கள் என தேமுதிக நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
இவர்களின் புலம்பல் இப்படி இருக்க, வந்தவாசி தொகுதியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் குக்கர் வேட்பாளர்களுக்கும், பணத்தை கொடுக்காமலேயே ஏமாற்றி விட்டார்களே என புலம்புவதோடு இனிமேலும் இங்கே இருந்து எந்தபலனும் கிடைக்காது என இடம்மாறுவதற்கும் தயாராகி வருகிறார்கள்.