அண்ணா நினைவிடத்திற்கு முதல்வர் பழனிசாமி ஓகே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.  

அண்ணா நினைவிடத்திற்கு முதல்வர் பழனிசாமி ஓகே சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் உடலுறுப்புகளை சீராக இயங்க வைப்பது சவாலாக இருப்பதாகவும் நேற்று மாலை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை தெரிவித்ததால், தொண்டர்கள் பதற்றமடைந்தனர். 

அதனால் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்துவரும் நிலையில், இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனையை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த புறப்பட்ட ஸ்டாலின், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் முதல்வரை சந்தித்து பேசினார். ஸ்டாலினுடன் அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோரும் சென்றிருந்தனர். கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடக்கும் பட்சத்தில், அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனை தரப்பில் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரை விதிகள், நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை காரணம் காட்டி முதல்வர் பழனிசாமி தொடக்கத்தில் பின்வாங்கினார். இதுதொடர்பாக அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே திமுக சார்பில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடமும் முறையிடப்பட்டது. நிதின் கட்கரி திமுகவின் கோரிக்கையை ஏற்றதால் அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க முதல்வர் ஓகே சொல்லிவிட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை கேட்டு மகிழ்ச்சியடைந்த துரைமுருகன் கண்ணீர் விட்டபடி ஓடியுள்ளார். இந்த தகவல் திமுகவினருக்கு பெரு மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.