ops cader people willing to contest rk nagar bi election
எதிர்வரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிட அவரது ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே. நகர் காலியானது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவின் இரு அணிகளான சசிகலா,ஓ.பி.எஸ். தரப்பினர் ஆர்.கே. நகரில் முண்டாசு கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர்.
சசிகலா சிறையில் இருந்தாலும், கட்சியிலும் சரி ஆட்சியலும் சரி முழு லகானையும் தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார். ஆட்சி மன்றக் குழுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்குச் சான்று....இதனால் இறுதி வேட்பாளரை அவர் சிறையிலேயே தேர்ந்தெடுப்பார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நோக்கிய சசிகலா அணியின் ஒவ்வொரு நகர்வும் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்போ அதிரடி சரவெடியாக, தன்னை நோக்கி வரும் அனைத்து விமர்சனங்களையும் சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் விளாசித் தள்ளி வருகிறது.
இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் சென்னை திரும்பிய ஓ.பி.எஸ். இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று அணுகுண்டை வெடிக்கச்செய்துள்ளார்.

இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதிலும் ஓ.பி.எஸ். மிகுந்த கவனத்துடன் பணியாற்றி வருகிறார்.
மூத்த நிர்வாகி மதுசூதனன், ஜே.சி.டி.பிரபாகர், டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகிய நால்வரில் ஒருவர் ஓ.பி.எஸ். சார்பில் ஆர்.கே.தொகுதியில் களமிறக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் ஆர்.கே. நகரை டிக்கடித்து ஓ.பி.எஸ்.சிடம் காட்டுவதால் யாரை வேட்பாளாராக அறிவிப்பது என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் முன்னாள் முதல்வர்
