பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பாக வாயில் வெள்ளை துணி கட்டுகொண்டு போராட்டம் நடத்தப்படும் என  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

பேரறிவாளன் விடுதலை- வரவேற்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பேரறிவாளனை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வரவேற்றுள்ளனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மீதமுள்ள 6 பேரையும் விடுவிக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்ததும் சட்ட வல்லுநர்களிடம் பேசிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கொலைகாரர்கள்-நிரபராதிகள் இல்லை

இந்தநிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்ட தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

வெள்ளை துணி கட்டி போராட்டம்

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு "வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது" என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாக கே.எஸ்.அழகிரி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.