துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்றும், தமிழக மக்களுக்கு நன்மை செய்யவோ, தமிழகத்துக்கு தொழில் தொடங்கவோ முதல்வர் அங்கே செல்லவில்லை என மக்கள் பேசிக் கொள்வதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கா..? அல்லது குடும்பத்திற்கு புதிய தொழில் தொடங்குவதற்காகவா? என்று மக்கள் கேட்பதாக அவர் கூறினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் பயணத்தை ஒரு குடும்பச் சுற்றுலாவாகத்தான் மக்கள் பார்க்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏனெனில், அரசு முறை பயணம் என்று சொல்லி சென்றுவிட்டு, அவர் மட்டும் துபாய் சென்று இருந்தால் பரவாயில்லை.மேலும் அந்த துறையின் அமைச்சர் மற்றும் செயலாளர் சென்றிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், முதலவரின் குடும்பமே துபாய்க்கு சென்றிருப்பதால் தான் மக்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய, தமிழகத்துக்கு தொழில் தொடங்க முதல்வர் அங்கே செல்லவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தெரிவித்தார். 

இதற்காக தனி போயிங் விமானம் மூலம் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் துபாய் சென்றிருக்கின்றனர். மேலும் முதல்வரின் பயணத்துக்கு முன்பாகவே, ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.அதுமட்டுமல்லாமல், சர்வதேச கண்காட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 31 ஆம் தேதி முடிவடையவுள்ளது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே கண்காட்சி இருக்கும் நிலையில், தற்போது முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரங்கத்தினை துவங்கி வைத்திருப்பது வேடிக்கையாக இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளார். 

கண்காட்சி தொடங்கியபோது தமிழக அரங்கத்தை திறந்திருந்தால் பரவாயில்லை என்று கூறிய அவர், இதை ஒரு சாக்காக வைத்து துபாய் செல்வதற்கு இதை பயன்படுத்தியுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். முந்தைய ஆட்சியில் நான் வெளிநாடு சென்றபோது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அதனை விமர்சித்தார். தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் வெளிநாடுகளுக்கு சென்ற போது, அனைவரும் பயணிக்கும் விமானத்தில் தான் பயணித்தேன். இந்த பயணத்தில், அமைச்சர்களும், அந்தந்த துறையின் செயலாளர்கள் மட்டுமே வந்திருந்தனர் என்று தெரிவித்தார்.

மேலும் லண்டனில் ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் கலந்தாலோசித்து ஆய்வு செய்தோம். எனவே முதலமைச்சர் துபாய்க்கு சென்றது அவருடைய தனிப்பட்ட காரணத்திற்காகவென்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். குடும்பத்தினர் புதிய தொழில் தொடங்குவதற்காக அங்கே சென்றுள்ளதாக மக்கள் பேசுவதை எங்களால் கேட்க முடிகிறது என்று கூறினார்.