"தமிழ்நாட்டின் நலனுக்காக முடிந்தளவு பேசியிருக்கிறேன்" - ஓ.பி ரவீந்திரகுமார் எம்.பி நெகிழ்ச்சி ..
தமிழகத்தின் நலனுக்காக தன்னால் முடிந்த அளவு மக்களவையில் பேசியிருப்பதாக ஓ.பி ரவீந்திரகுமார் எம்பி கூறியிருக்கிறார் .
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி ரவீந்திரகுமார் . அதிமுகவின் ஒரே உறுப்பினராக மக்களவையில் அவர் செயல்பட்டு வருகிறார் .பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் அத்தனை மசோதாக்களையும் ஆதரித்து பேசி அதிமுக தலைமைக்கே அதிர்ச்சி கொடுத்து வருகிறார் .
இந்த நிலையில் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ரவீந்திரநாத் குமார், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களிலும் பங்கேற்று பேசியுள்ளதாகவும் தமிழகத்தின் நலனுக்காக தன்னால் முடிந்த அளவு பேசியிருப்பதாகவும் கூறினார் .மேலும் மக்களவையில் அதிமுகவின் ஒரே உறுப்பினராக இருப்பதால் இறுதியாகவே தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ரவீந்திரநாத்குமார் கூறினார்.