வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை... உள்நோக்கம் இல்லை.. சி.டி.ரவி..!
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்துகிறார்கள் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்துகிறார்கள் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலையில் போட்டியிடும் எ.வ.வேலுவின் வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டி விட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில், ஈரோட்டில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளரான சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வருமான வரித்துறையினர் சுதந்திரமான அமைப்பு. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபடுகின்றனர். வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து கருப்புப்பணம் வைத்துள்ளவர்களே கவலைப்பட வேண்டும்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்பு சம்பந்தமான செய்தியாளர்களின் கேள்விக்கு, கருத்துக்கணிப்பு என்பது ஆரூடம் மட்டுமே. கடந்த 2016ல் திமுகதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்றனர். ஆனால், அதிமுகதான் வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாய பின்புலமும் கொண்டவர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பின்புலமும் கொண்டவர். மக்கள் ஆராய்ந்து ஓட்டு போடுவார்கள். கட்டப்பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு உள்ளிட்டவை வேண்டுமென்றால் திமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்றார்.