இன்னும் அரை மணி நேரம்தான்... முதல்வராக இருந்தும் ஒண்ணும் செய்யமுடியல... பதறும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லியில் பல மருத்துவமனைகளில் அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்த ஆக்சிஜன் உள்ளது; ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு பேரழிவே ஏற்பட்டுவிடும்
டெல்லியில் பல மருத்துவமனைகளில் அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்த ஆக்சிஜன் உள்ளது; ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு பேரழிவே ஏற்பட்டுவிடும் என பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘’ஆக்சிஜனை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலும், அதனை டில்லிக்கு கொண்டு வர உதவ வேண்டும். ஆக்சிஜன் தேவைக்காக பல மாநிலங்களை டில்லி நம்பி உள்ளது. மே.வங்கம், ஒடிசாவில் இருந்து ஆயிரம் டன் ஆக்சிஜன் வர வேண்டி உள்ளது. ஆனால், டில்லிக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர்களை பல மாநிலங்கள் தடுக்கின்றன. இந்த பிரச்னையில் மத்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்சிஜன் பிரச்னையால், டில்லி மருத்துவமனைகள் கடும் சிக்கலில் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பேரழிவு ஏற்படும். இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வராக இருந்தும், மக்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.