ராபர்ட் வதேராவுக்கு கடும் நெருக்கடி !! அமலாக்கத்துறையில் இன்று ஆஜராக சம்மன் !!
சட்டவிரோத பணப்பறிமாற்ற விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வதேரா இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாககத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, வெளிநாட்டில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் 12 தடவை விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி முன்னிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து உள்பட 3 நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி டெல்லி தனிக்கோர்ட்டில் ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வெளிநாடு செல்ல வதேராவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வக்கீல் வாதிட்டார். இதுகுறித்து 3-ந் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து இன்று வதேரா அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராவாரா ? மாட்டாரா என்பது குறித்து அவர் தரப்பில் இருந்து தகவ்ல எதும் வெளியிடப்படவில்லை.