"ஆர்.கே நகரில் என்னை மீறி ஒரு அணுவும் அசையாது" - மார்தட்டும் மதுசூதனன்
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குக் கொடுக்க காவல்துறை அதிகாரி வீட்டில் கட்டுகட்டாக பணம் பதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
வரம் 12ம் தேதி ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொருவரும் நாளுக்கு நாள் மக்களை சந்தித்து தங்கள் சின்னத்திற்கு வாக்களிக்க கூறி நடையாய் நடந்து வருகின்றனர்.
இதனிடையில் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ள மதுசூதனன் தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது கூறுகையில் “ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஆதரவும், மக்களின் ஆதரவும்எனக்குதான் உள்ளது என்றார். கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து சசிகலாவின் குடும்பத்தை வெளியேற்றவே எங்கள் அணி போராடி வருகிறது என்றும் அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் சசிகலா மீது கடும்வெறுப்பில் உள்ளதாக கூறினார்.
டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் பொருட்களை கொடுத்து வெற்றி பெற்றிடலாம் என்று நினைத்து கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். கனவில் வேண்டுமானால் அவர் ஜெயிக்கலாம். எனக்கு எதிராக போட்டியிடும் போது அது பலிக்காது என்றார்.
மேலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலேயே கட்டுக்கட்டாக பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் குடியிருப்பில் காலியாக கிடக்கும் வீடுகளில் வெளியாட்களை தங்கவைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்போவதாகவும், ஒரு அமைச்சர் இதற்கான ஏற்பாட்டை செய்து வருவதாக எனக்கு தகவல்கள் வந்துள்ளன.
எங்கள் தொண்டர்களுக்கு தெரியாமல் இத்தொகுதியில் ஒரு அணு கூட அசையாது அப்படி நடந்தால் அதை முறியடிப்போம் என்று ஆவேசமாக கூறினார்.