அரவக்குறிச்சியில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளன.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை , அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்து. பணம் ஆறாக ஓடிய தொகுதியாக அரவக்குறிச்சி பார்க்கப்பட்டது. இந்தியா முழுதும் இதன் மூலம் அரவக்குறிச்சி பிரபலமானது.

அரவக்குறிச்சியில் மட்டும் அப்படி என்ன விஷேஷம் என்று பார்த்தால் அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களான செந்தில்பாலாஜி , கே.சி.பழனிச்சாமி இருவரும் தான். பண பலம் ஆள் பலம் செல்வாக்கு அனைத்திலும் சரி சமபலம் உள்ள இருவரும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் இருவரும் செய்த செலவுகள் , மற்ற அதிகார துஷ்பிரயோகங்கள் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டும் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம் இரண்டு வேட்பாளர்களும் போட்டியிட தடையில்லை என அறிவித்தது. இதையடுத்து இரண்டு கட்சிகளும் அதே பழைய வேட்பாளர்களையே அறிவித்தனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜி , கே.சி.பழனிச்சாமி இருவரும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். 12-30 லிருந்து 1-30க்குள் இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் . இதை ஒட்டி இன்னும் இரண்டு நாளில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி விடும்.
