ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுப்பு….அறிவித்த உடனேயே எதிர்ப்புத் தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் !!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , ராகுலே வருக.. நல்லாட்சி தருக .. என்று கூறி ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த நிலையில் அதற்கு தோழமை கட்சியான கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய, திமுக தலைவர் ஸ்டாலின், நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போயிருக்கிறேன். திமுக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாள் மட்டுமல்ல, என்னுடைய வாழ்விலும் மறக்க முடியாத நாள். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான, மறக்க முடியாத நாள்.
தந்தை பெரியார் கருணாநிதிக்கு சிலை வைக்க முயன்றபோது அதனை தடுத்தவர் கருணாநிதி. கருணாநிதி மறையவில்லை என்றே உணர்கிறேன். கருணாநிதி எங்கும் செல்லவில்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் நிலைத்திருக்கிறார்.
தமிழகம் எதிர்த்த திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வெளிநாட்டில் மரணம் நடந்தால் பிரதமர் டுவிட் செய்கிறார் டெல்டாவில் மரணம் அடைந்தால் இரங்கல் தெரிவிப்பதில்லை.
பரம்பரை மன்னர் என்ற மமதையுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது.
தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் மோடி. அதனால் தான் மோடி அரசை வீழ்த்த வேண்டும்.
வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். சமூக நீதி, சுயாட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பாஜகவை எதிர்க்கிறோம். கஜா புயல் பாதிப்புக்கு ஒரு வார்த்தை கூட பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை.
ராகுல்காந்தியை பிரதமராக்குவோம். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், . மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். “ராகுல்காந்தியே வருக... நல்லாட்சி தருக” ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்தான் பிரதமர் யோர் என்பதை கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும், தேர்தலுக்கு பின்தான் பிரதமர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இப்படி திடீரென பேசியிருப்பது, இந்த புதிய கூட்டணிக்கு பின்னடைவைத் தருமா ? என கேள்வி எழுந்துள்ளது.