சாரிங்க….. வேற வழியே இல்லாமத்தான் ஸ்ட்ரைக் பண்ணுறோம்…. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் விளக்கம் !!
போக்குவரத்துத் துறை ஊழியர்களின் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் அணுகுமுறையை எதிர்கொள்ள, வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த செளந்தரராஜன் கூறியுள்ளார். பொது மக்களுக்கு மிகுந்த இன்னல்கள் ஏற்பட்டாலும், எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இப்போது முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியூ செளந்தரராஜன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போது அழைத்தாலும் செல்ல தயார். அரசின் அணுகுமுறையை எதிர்கொள்ள, வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி தெரியவில்லை என கூறினார்..
ஓய்வுபெற்றவர்களுக்கான நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை பெற 2 வருடம் காத்திருக்க வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு அரசுதான் காரணம். நாங்கள் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க முடியாது.
ஒரு அரசாங்கமே கஷ்டத்தையே தாங்க முடியாது என்றால் தொழிலாளி எப்படி கஷ்டத்தை தாங்கிக்கொள்வார் என கேள்வி எழுப்பிய அவர், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
பொது மக்களும், பயணிகளும் எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என சிஐடியூ செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.