no one can power to destroy admk said thambidurai
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உதவியாளர்கள், சசிகலா, தினகரனின் வழக்கறிஞர்கள், ஜோதிடர் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை தொடங்கிய நாளன்று 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பல இடங்களில் சோதனை முடிந்துவிட்ட நிலையில், நான்காவது நாளாக இன்றும் சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயா டிவி அலுவலகம், கிருஷ்ணபிரியா வீடு, மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் 4-வது நாளாக இன்று சோதனை நடைபெற்றுவருகிறது.
நான்கு நாட்களாக நடைபெறும் சோதனையில், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்படும் சோதனை குறித்து என்னிடம் கேட்கக்கூடாது; வருமான வரி அதிகாரிகளிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவை அழிக்க எந்த கட்சிக்கும் சக்தியும் வலிமையும் கிடையாது எனவும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பது அதிமுக அரசுக்கு கிடைத்த வெற்றி எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.
