வரவிருக்கும் தேர்தலில் மூலம் எந்த அதிசயமும் அரங்கேற போவதில்லை. ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும் ஆனால் நெறி சார்ந்த நல்ல அரசியல் வாய்ப்பதற்கு வழி இல்லை. 

களத்தில் இருக்கும் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாகப் புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஊழலில் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும். கடந்த 12 ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு லட்சிய பாதைகளை சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தை தொடர்கிறது. உண்மை, நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்புநலன்கள் ஆகும். 

ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளிடம் இவற்றை காண்பதற்கில்லை, இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடமில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலில் மூலம் எந்த அதிசயமும் அரங்கேற போவதில்லை. ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும் ஆனால் நெறி சார்ந்த நல்ல அரசியல் வாய்ப்பதற்கு வழி இல்லை. 

எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று 23 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தன் இருப்பை வெளிப்படுத்த அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை. களத்தில் நிற்கும் எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது. இவ்வாறு தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.