எவ்வளவு சக்தி வாய்ந்த நாடாக இருந்தாலும் கொரோனா தனியாக எதிர்கொள்ள முடியாது.. பிரதமர் மோடி..!
பெருந்தொற்றின் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் கொரோனாவுக்கு இணையான தொற்று எதுவும் இல்லை.
பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசி தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கோவின் குளோபல் என்ற உலகளாவிய மாநாட்டில் காணொலி வழியாக உரையாற்றிய பிரதமர் மோடி;- பெருந்தொற்றின் காரணமாக அனைத்து நாடுகளிலும் உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் கொரோனாவுக்கு இணையான தொற்று எதுவும் இல்லை. எத்தகைய வலிமையான நாடாக இருந்தாலும் எந்தவொரு நாட்டினாலும் இந்த சவாலை தனியாக எதிர்கொள்ள முடியாது என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது.
தடுப்பூசி வழங்குவதை திட்டமிடும்போது இந்தியாவில் டிஜிட்டல் அணுகுமுறையை கையாள நாங்கள் முடிவு செய்தோம். தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே, இந்த போரில் உலகளாவிய சமூகத்துடன் நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்ததாகும். ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாகக் கருதுவதே இந்திய நாகரிகம். பலரது மனதில் இந்த தத்துவத்தின் அடிப்படை உண்மையை பெருந்தொற்று காலம் உணரச் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்க தயார். பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசியே. தொடக்கத்தில் இருந்தே, நமது தடுப்பூசி நடவடிக்கைகளை திட்டமிடும்போது முழுவதுமாக டிஜிட்டல் வழிமுறைகளைக் கடைபிடித்து வருகின்றோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.