நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதி அமைச்சருக்கு தெரியாது என்றும்.  அடிப்படையிலேயே அவர் திறமையற்றவர் என்றும் நிர்மலா சீத்தாராமனை ராகுல்காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் , முன்னாள் தலைவர் ராகுல், இன்று தனது சொந்த தொகுதியான வயநாடு சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது பேசிய அவர், இந்தியாவின் இன்றைய பொருளாதார நிலை அனைவருக்கும் தெரியும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, நாட்டின் நிதிப்பொறுப்பை திறமையானவர்கள் கையாண்டார்கள். 10 - 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியின் போது கட்டிக்காக்கப்பட்ட பொருளாதாரம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிதியமைச்சரிடம், வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டால், 'நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை' என்கிறார். அவர், வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என்பது குறித்து யாரும் கேட்கவில்லை. 

அவர் நிதி அமைச்சர் என்பதால் விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம். உண்மை என்னவெனில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியவில்லை. அடிப்படையிலேயே அவர் திறமையற்றவர் என ராகுல் மிகக் கடுமையாக பேசினார்.