ரோட்டில் இறங்கிய அமைச்சர் ! ஓட்டுக்கு பணம்கொடுத்த அதிமுகவினரை தில்லாக மீட்டுச் சென்ற நிலோஃபர் !!
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெரியபேட்டைப் பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த 2 அதிமுகவினரை திமுக நிர்வாகிகள் கையும் களவுமாக போலீசில் பிடித்துக் கொடுத்தும் அவர்களுடன் சண்டையிட்டு அந்த இருவரையும் அமைச்சர் நிலோஃபர் மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் வேலூர் தொகுதி தேர்தல் மட்டுன் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமக கூட்டணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இன்று தேர்தல் நடைபெற்றது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். திமுக சார்பில் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வாக்குப்பதிவு தினமான இன்று வேலூஙா மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பெரிய பேட்டைப் பகுதியில் அதிமுகவினர் இரண்டுபேர் ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாணியம்பாடி திமுக நகரச் செயலாளர் சாரதி ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த அதிமுகவினர் இரண்டு பேரையும் கையும் களவும்க பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்து கேள்விப்பட்ட அமைச்சர் நிலோஃபர் கபீல் அந்த இடத்துக்கு விரைந்து வந்து அந்த இருவரையும் மீட்க முயன்றார். அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என திமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசாரிடம் கடும் சண்டையிட்ட அமைச்சர் நிலோஃபர் கபீல் அவர்களிடமிருந்து பணம் கொடுத்த அதிமுகவினர் இருவரையும் அதிரடியாக மீட்டுச் சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.