அடுத்து ஸ்டாலின் வீட்டுமுன் போராட்டம் நடத்துவேன்.. அடங்காத அண்ணாமலை..
திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் ஏன் கண்டன ஆர்ப்பாட்டம் என கேட்கிறார்கள். வேண்டுமென்றால் 5 வருடம் கால அவகாசம் கொடுக்கலாமா ?.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் அடுத்த போராட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டின் முன் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு எதிராக பாஜக மீனவர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் அண்ணாமலை பேசியதாவது,
விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு மீனவர்களும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் முதலில் வந்து நிற்கும் கட்சியாக பாஜக திகழ்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து 83 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் ஏன் கண்டன ஆர்ப்பாட்டம் என கேட்கிறார்கள். வேண்டுமென்றால் 5 வருடம் கால அவகாசம் கொடுக்கலாமா ?. இரண்டு வருடங்களாக மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஆனால் மீனவர்களுக்கான உதவி தொகையில் 8000 ரூபாயில், 5000 மட்டுமே தருகிறார்கள்.
ஒரு இடைக்கால பட்ஜெட் போட வில்லை. மானிய டீசல் உயர்த்தி கொடுப்பது பற்றி எந்த உறுதிமொழியும் இல்லை. மோடியை பற்றி பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 464 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டனர். ஆனால் இப்போது அப்படி ஒரு நிலை இல்லை. மோடி அரசு தமிழக மீனவர்களுக்கு 1500 கோடி ஒதுக்கியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லி விட்டு, கோபாலபுரத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அவர் பேசினார்.