தமிழக அரசின் விருதுப் பட்டியலில் செய்தி வாசிப்பாளர்களும் சேர்க்கப்படுவார்கள் !! அமைச்சர் ஜெயகுமார் உறுதி !!
தமிழக அரசு கலைஞர்களுக்கு ஒவ்சொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வரும் நிலையில் சேனல்களில் செய்தி வாசிப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்க ஆவண செய்யப்படும் என அமைச்சர் ஜெயகுமார் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர் ஜெயக்குமாரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
அதில் தமிழக அரசு தற்போது கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி வரும் நிலையில் அந்தப் பட்டியலில் செய்தி வாசிப்பாளர்களையும் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்தி வாசிப்பாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிக்கை அலுவலகங்களில் பணி புரிவோர் அனைவருக்கும் தேவையான அரசு உதவிகளை செய்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ஜெயகுமார், செய்தி வாசிப்பாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க நேரம் வாங்கித் தருவதாகவும் அமைச்சர் கூறினார்.
சங்க தலைவர் பிரபுதாஸன், நிர்வாகிகள் ஜெயஸ்ரீசுந்தர், செந்தமிழ் அரசு, சர்வோதயராமலிங்கம், கீதா, ஜெயந்தி ஆனந்த், சௌதாமணி, உள்ளிட்டோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்