ஒஸ்தி விலை சிங்கிள் சரக்கை என்னதான் ஒய்யாரமாக அடித்தாலும் கூட அது தராத ரகளையான போதையை, சாதாரண விலை சரக்குகள் பலவற்றை சேர்த்து அடிக்கும் போது கிடைக்கின்ற ரசனையான இன்பமே தனிதான்.  அதேபோல் நியூஸ் காக்டெயில் இது...

*இன்றைய தேதிக்கு தமிழக அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் சகல கட்டங்களும் சர்வ லட்சணமாய் பொருந்தியிருப்பது தினகரனுக்குதான். அதனால் ஸ்விட்ச் போடப்பட்ட ஜெட் போல் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறார் உயரே! உயரே! ஆனால் இவ்வளவு ஸ்பீடு ஆகாது என்று சசிகலாவே அவருக்கு கொஞ்சம் ஸ்பீடு பிரேக்குகளை தட்டிவிட்டிருக்கிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் சசி -தினகரன் இணைந்த கைகளின் அடுத்த இலக்காக, தங்கள் தரப்பிலிருந்து ஒரு பெண்னை அரசியலில் முன்னிலைப்படுத்துவது என்பதுதான். சர்ச்சையில் சிக்காத அதேவேளையில் தங்களின் கைக்கு அடக்கமான ஒரு பெண் தான் வேண்டுமென்பது சிறைக்குள்ளிருந்து சசி போட்டிருக்கும் பிளான். இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கெத்தான பெண் தான். ஆனால் அவர் சசியின் இழுப்புக்கு சரிப்பட்டு வரமாட்டார். 

அதேவேளையில் அனுராதாவோ சசியிடம் ரொம்பவே பாசமானவர். தினகரன் பெங்களூரு சிறை சென்று சசியை பார்க்கும் போதெல்லாம், அனுவும் உடன் செல்வார். இதனால்தான் அவரை அரசியலில் களமிறக்க சசி முடிவெடுத்து தினகரனை கேட்க, அவரும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டாராம். 

கூடவே அனுராதாவின் ஜாதக கிரக நிலைகளும் சிறப்பான நிலையில் இருப்பதால் கூடிய விரைவில் அவரது விஜயம் வெளிச்சத்துக்கு வரும்! என்கிறார்கள். கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் பொசிசன் அளவுக்கு அனுராதாவை திங்க் பண்ணி வைத்திருக்கிறார் சசி. 

*கருணாஸின் கைது விஷயத்தில் ’சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது’ என்று கமெண்ட் அடித்திருக்கும் எஸ்.வி.சேகர்...’கமல் தன் கட்சிக்கு மய்யம்! என பெயர் வைத்துவிட்டு மய்யமாகவே இருக்கிறார். எந்தப் பக்கம் சார்பு நிலை எடுக்கப்போகிறார் என்று இதுவரையில் சொல்லவில்லை. புரிகிறமாதிரி கமல் பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் அவர் வருவாரா என்பது சந்தேகமே!’ என்று தெறிக்கவிட்டிருக்கிறார். 

*நடிகர் சங்க தேர்தல் நேரத்தில் விஷாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, அந்த அணியை மிக கடுமையாக விளாசித் தள்ளினார் சிம்பு. இதற்கு பதிலடியாக ‘அன்பானவன், அடங்காதவன் அசராதவன்’ பட விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான கட்டுப்பாடுகளை விஷால் போட்டு பழி தீர்த்தார். 

இந்நிலையில் சமீபத்தில் விஷாலுக்கு ஆதரவாக சிம்பு ஒரு அறிக்கையை தட்டிவிட, இருவருக்கும் இடையில் நெருக்கங்கள் உருவாகிவிட்டன. இதனால் சிம்பு மீதான கட்டுப்பாடுகள் பற்றி விஷால் கண்டுகொள்ளவில்லை. 

இதில் கடுமையாய் பாதிக்கப்பட்டுவிட்டார் ‘அ அ அ’ பட தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன். தன்னுடைய பிரச்னையையும், தான் வஞ்சிக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் புலம்பலாக வார்த்தைகளை போட்டுவிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.