தமிழகத்தில் சுமார் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான 234 தொகுதிகளுக்குமான விருப்பமனுவை இன்று முதல் வருகின்ற 15ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் சுமார் 6 மாத காலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரசாரம், கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh?usp=sharing லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


