சசிகலா செய்த அதே தப்பை செய்யும் ஓபிஎஸ்... ஓகே சொல்லுமா தேர்தல் ஆணையம்!
ஓ.பி.எஸ். அணிக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதில் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியனுக்கு உள்ளிட்டோருக்கு முக்கியப் பதவிகள் வழங்கவிருப்பதாக தெரிகிறது.
பன்னீரின் தியானத்திற்குப்பின் அதிமுகவிலிருந்து தனி அணியான பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், செம்மலையை தவிர யாருமே ஓ.பி.எஸ் பக்கம் வரவில்லை, முக்கிய அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள். இன்னமும் எடப்பாடி அணியிலேயே இருக்கிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ். டீமோ தொண்டர்கள் ஆதரவு ஆதரவு இருப்பதாக மேடைக்கு மேடை பேசிவருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டங்களில் தடபுடலாக பொதுக்கூட்டங்களை நடத்தி தமக்கு ஆதரவு இருப்பதை நிரூபித்தாலும், எதிராணியிலிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. ‘எடப்பாடி ஆட்சி களையும். நிர்வாகிகளும் ஆதரவு தமக்கே கிடைக்கும்’ என்கிற நம்பிக்கையில் யாருக்கும் பொறுப்பு வழங்காமல் காலம் கடத்தினார்.
இந்நிலையில், புதிய நிர்வாகிகளை நியமித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்துக்கு வந்துவிட்டார் ஓ.பி.எஸ், அவைத்தலைவர் பதவியில் மதுசூதனனும், பொருளாளராக ஓ.பி.எஸ்.ஸும் நீடிக்கின்றனர். அதுமட்டுமல்ல அதே பதவிகளில் தொடர்ந்தால்தான், அ.தி.மு.க.வுக்கு உரிமை கோர முடியும் என்ற நிர்பந்தமும் இருக்கிறதாம்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக சட்டவிதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பொதுச்செயலாளருக்கே மொத்த அதிகாரம் என இதே ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்தில் வாதாடி வருகிறது. இப்படி இவர்களே முக்கிய நிர்வாகிகளை நியமித்தால், சசிகலா செய்த நியமனங்களும் தப்பில்லை என்பதை எதிரணியினர் சுட்டிக்காட்டிவிடுவார்களோ என்ற பயத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் புதிய நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம் ஓ.பி.எஸ்.
இதுகுறித்து டெல்லி சென்றுள்ள மைத்ரேயன் தலைமை தேர்தல் ஆணையரிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘கடந்த மார்ச் 22-ல் இரட்டை இலையை முடக்கிய தேர்தல் ஆணையம், எங்களை புரட்சித்தலைவி அம்மா அ.தி.மு.க. என அங்கீகரித்தது. கட்சியின் செயல்பாடுகளை மேற்கொள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுக்கவேண்டும்’ என கூறியிருக்கிறார்.
ஒருவேளை பன்னீர்செல்வம் அணியின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில் கட்சியின் சீனியர்களான நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன் உள்ளிட்டவர்களுக்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.