ஸ்டாலின் அமைச்சரவையில் நெல்லைக்கு அல்வா... ராதாபுரம் அப்பாவு சபாநாயகர் ஆவாரா..?
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து யாரும் அமைச்சராகாத நிலையில், ராதாபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு சபாநாயகராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்மாவட்டங்களில் மதுரைக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் திருநெல்வேலி. எந்த ஆட்சியாக இருந்தாலும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும். 2006-இல் கருணாநிதி அமைச்சரவையில் மைதீன்கான், பூங்கோதை; 1996-இல் ஆலடி அருணா என இந்த மாவட்டத்திலிருந்து அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அமைச்சரவையிலும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில்கூட ராஜலட்சுமி, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தார்.
ஆனால், மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் நெல்லை மாவட்டத்திலிருந்து யாரும் அமைச்சராக அறிவிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவு, வகாப் ஆகியோரில் ஒருவர் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவருக்குமே வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-இல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன் சபாநாயகராகப் பதவியேற்றார். தற்போது நெல்லைக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில் அப்பாவு சபாநாயகராக ஆவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சபாநாயகராகவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட துரைமுருகன், சக்கரபாணி ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல டெல்டா மாவட்டத்திலிருந்தும் யாரும் அமைச்சர்கள் அறிவிக்கப்படாததால், இந்த மாவட்டத்திலிருந்து சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிக்கு யாராவது அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி திமுகவினர் உள்ளனர்.