தமிழகத்தில் தேசப் பிரிவினைவாத செயல், ஜெய்ஹிந்த் விவகாரம்.. பிரதமர் மோடியிடம் பற்ற வைத்த தமிழக பாஜக.!
தமிழக அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினைவாதச் செயல்பாடுகள் குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். குறிப்பாக ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்துப் பிரதமரிடம் எடுத்துரைத்தோம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகியோர் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் பாஜக வரவே வராது என்றார்கள். இப்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்று பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். இச்சந்திப்பின்போது நீர் சேமிப்பு குறித்து பிரதமர் எங்களிடம் அறிவுறுத்தினார்.
தமிழகம் குறித்து பிரதமர் எங்களிடம் பல விஷங்களைக் கேட்டறிந்தார். ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை என பல ஆன்மிகத் தலங்கள் உள்ள மாநிலம் தமிழகம் ஆகும். எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என பிரதமரிடம் கோரினோம். தமிழக நலன் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகிவிட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் திமுக அதைத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்தது. நீட் தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழு சாதகங்களைக் கேட்கவில்லை. பாதகங்களை மட்டுமே கேட்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு என்ன செய்வதென தெரியாமல் இதுபோல ஒரு குழுவை திமுக அரசு அமைத்திருக்கிறது.
தமிழக அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினைவாதச் செயல்பாடுகள் குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். குறிப்பாக ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்துப் பிரதமரிடம் எடுத்துரைத்தோம். மத்திய அரசின் திட்டங்களைத் தமிழக மக்களிடம் கொண்டுசேர்க்க பிரதமர் அறிவுறுத்தினார். தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தமிழகத்துக்கு தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் தமிழகம் வீணடிப்பதைத் தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் எனப் பிரதமர் எங்களை அறிவுறுத்தினார்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.