சசிகலா எழுதும் சுயசரிதை – நடராஜன் ருசிகர தகவல்!
தனியார் தொலைகாட்சிக்கு நடராஜன் அளித்த பேட்டியில் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய கேள்வி எழுந்த போது சசிகலா சுயசரிதை எழுதி வருகிறார் என்று தெரிவித்தார்.
நடராஜனின் பேட்டியில் ‘ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் போனது திடீரென நடந்திருக்காது.
அவருக்கு உடல்நிலை சிறிது சிறிதாக பாதிப்படைந்ததை சசிகலா அறிந்திருக்க மாட்டாரா? அவரால் தடுத்திருக்க முடியாதா? என்ற கேள்விக்கு “எல்லா விசயத்திலும் அவருக்கு சசிகலா எடுத்து கூற முடியாது.அவர்களுக்குள் முரண்பாடும் இருந்திருக்கிறது.
ஜெயலலிதா தன்னை ஒரு நோயாளியாக காட்டிக்கொள்ள விரும்பாதவர். மேலும் ஜெயலலிதா உடல்நிலை விவகாரத்தில் அதிகாரிகளும் கவனித்திருப்பார்கள்.
அன்று கூட வீட்டில் லேசான மயக்க நிலைக்கு சென்றதை அதிகாரிகள் அறிவார்கள். அவர்களிடமே கேட்கலாம். இப்போதும் அவர்கள் ட்யூட்டியில் தான் இருப்பார்கள்” என்று தெரிவித்தார்
இதையடுத்து “ஜெ. உடல் சுகவீனப்படுவதை சசிகலா தடுத்திருக்க முடியாதா?” என்று மீண்டும் நெறியாளர் மடக்கி கேட்க “அதை அவங்க கிட்டதான் கேட்கணும்.நீங்க வேண்டுமானால் சிறையிலிருக்கும் சசிகலாவை பேட்டி காணலாம். நான் வேண்டுமானால் ஏற்பாடு செய்கிறேன். சசிகலாவும் சுய சரிதை எழுதி வருகிறார்” என்று தெரிவித்தார். சிறையில் சசிகலா சுயசரிதை எழுதி வருவதும் மிக பெரிய செய்திதான் என்று நெறியாளர் தெரிவித்தார்.
இதன் மூலம் சிறையில் உள்ள சசிகலா தன வாழ்க்கை வரலாறை எழுதி வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.
அவ்வாறு அவர் எழுதும் பட்சத்தில் ஜெ. உடன் அவர் இருந்த 32 ஆண்டுகள், ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகள்,வெளிவராத பக்கங்கள்,அவரது வியூகம், அவரது ஆளுமை என பல விசயங்கள் அதில் இருக்கும்.
குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் தமிழக அரசியலில் 35 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்திய ஜெ. வரலாற்றை தவிர்த்து சசிகலா சுய சரிதை எழுத முடியாது.
ஜெ. வரலாறு என்பது தமிழ்நாட்டின் அரசியலோடு பின்னி பிணைந்த ஒன்று என்ற ரீதியில் தமிழ்நாட்டின் 35 ஆண்டு கால வரலாறாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.