Nanjil sambath and Pugazhenthi comments against Yedapadi and OPS team

அதிமுக இரு அணிகளாக பிரிந்து கிடந்தாலும், ஆளும் எடப்பாடி தரப்பில் இருக்கும், நாஞ்சில் சம்பத்தும், கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தியும் எடப்பாடியை வறுத்தெடுக்க தவறுவதில்லை.

நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகிய இருவரும் தினகரனின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறுகிறார் எடப்பாடி.

தமிழகம் முழுவதும் தினகரன் கைதை கண்டித்து போராட்டம் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்று வரும் சம்பத், புகழேந்தி ஆகிய இருவரும், மத்திய அரசையும், முதல்வரையும் தாறுமாறாக விமர்சிப்பதுடன், அணிகள் இணைப்புக்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.

கட்சி தலைமையின் அனுமதியுடன்தான் இத்தகைய போராட்டங்களும், பொது கூட்டங்களும் நடத்தப்படுகிறது என்று அவர்கள் கூறினாலும், முதல்வர் எடப்பாடியை, அவர்கள் விமர்சிப்பது, அதிமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்நிலையில், பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்த சம்பத், புகழேந்தி ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நாஞ்சில் சம்பத், மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரளா, மேற்கு வங்காளத்தைப் பின்பற்றி, மத்திய அரசாங்கம் விதித்த தடையை தமிழகத்திற்கு பொருந்தாது என முதல்வர் அறிவிக்க வேண்டும் என்றார்.

நோன்பு காலத்தில் சிறுபான்மை மக்களின் நெஞ்சத்தில் அச்சத்தை விதைக்கிற ஒரு அயோக்கியத்தனத்தை மத்திய அரசு செய்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது எனச் சொல்லும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்னும் போதையில்தான் இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு பேராபத்து விளையும் என்று குறிப்பிட்ட சம்பத், வைரவிழா கொண்டாடுகிற கலைஞர் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது பேசிய புகழேந்தி, இரண்டு அணியும் இணையும் என்று சொல்வது நகைச்சுவை ஆகி வருகிறது என்றார்.

முதல்வரும் , வனத்துறை அமைச்சரும், அணிகள் இணையும் என்று சொல்வது, ஊரை ஏமாற்றும் செயல். அணிகள் இணைவது அயோக்கியத்தனமான வேலை என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதா இருந்தவரை, வாயே திறக்காமல் இருந்தவர்கள் எல்லாம் இன்று வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் புகழேந்தி கூறினார்.