உங்களாலே எங்க டைம் வெத்து வேஸ்டாகி போச்சு: அமைச்சர் வீரமணியை வறுத்தெடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ...
சசிகலா - தினகரன் டீமை வகைதொகையில்லாமல் விமர்சித்து தூர்வாரும் அமைச்சர்களில் வீரமணியும் ஒருவர். ‘அந்த குடும்பமே அப்படித்தான்யா’ என்று சசி கோஷ்டியை ஏகத்துக்கும் ரவுசு விட்டவர். நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் பல முறை எச்சரித்தும் வீரமணியின் வீராவேசம் குறையவில்லை.
அப்பேற்ப்பட்ட வீரமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் செமத்தியாக நாக் அவுட் கொடுத்திருக்கிறார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு மடிக்கணிணி அமைச்சர் வீரமணி வழங்குகிறார் என்று அறிவித்திருக்கின்றனர். அந்த தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான நந்தகுமார் குறித்த நேரத்தில் விழாவுக்கு வந்துவிட்டார். ஆனால் அமைச்சரோ 3 மணி நேரம் லேட்டாக வந்திருக்கிறார். இதற்குள் ஒரு மாணவன் மயக்கமடைந்துவிட பெரும் பரபரப்பு.
அமைச்சர் வந்ததுவுடன் எம்.எல்.ஏ. நந்தகுமார் ‘நீங்க எப்ப வருவீங்கன்னு கரெக்டா சொல்லிட்டா இப்படி எல்லாரும் அநாவசியமா காத்திருக்க வேண்டியதில்ல. எங்க டைம் வெத்து வேஸ்டாகி போச்சு. உங்களால ஒரு மாணவன் மயங்கிட்டான், ஏதாச்சும் பிரச்னையாச்சின்னா என்னாங்க பண்றது?’ என்று முதல் ரவுண்ட் அர்ச்சனையை முடித்திருக்கிறார்.
அடுத்து மைக்கில் பேசும் போதும் வீரமணியை விட்டுவைக்காத நந்தகுமார், ரொம்ப லேட்டா லேப்டாப் கொடுக்குறதால பசங்களுக்கு பிரயோசனமில்ல, கொடுக்குறதை உரிய காலத்துல கொடுக்காம வெறுமனே அரசியல் பண்ணிட்டிருக்காங்க எனும் அளவுக்கு வகுந்தெடுத்திருக்கிறார்.
ஆனால் வீரமணியோ இதுக்கெல்லாம் பதில் சொல்லாமல் பம்மலாக இருந்துவிட்டாராம். சொந்த கட்சி பங்காளியிடம் மல்லுக்கு நிற்கும் வீரமணி இப்படி எதிர்கட்சி எம்.எல்.ஏ.விடம் மடங்கிப் போனதை அவரது ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.
ஆனால் அமைச்சரோ ‘ஏற்கனவே ரொம்ப லேட்டா வந்துட்டோம். இதுல பதிலடி கொடுத்து பேசினால் வெறும் பிரச்னைதான் மிஞ்சும். ஸ்கூல் பசங்க முன்னாடி நாமளே பொறுப்பில்லாம நடந்துக்க கூடாது.” என்று பொறுப்பாய் பேச, ஆதரவு கைகள் ப்பார்றா! என்று அதிர்ந்திருக்கிறார்கள்.