சமயப் புரட்சி  இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என தெரிவித்துள்ள சீமான் முருகன் சிவன் கடவுள்கள் இந்துவா? 63 நாயன்மார்களும் இந்துவா? என கேள்வி எழுப்பியுள்ளார். பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கினாலும் தான் அதை எதிர்ப்பதாகவும் சீமான் கூறினார். 

சமயப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என தெரிவித்துள்ள சீமான் முருகன் சிவன் கடவுள்கள் இந்துவா? 63 நாயன்மார்களும் இந்துவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கினாலும் தான் அதை எதிர்ப்பதாகவும் சீமான் கூறினார். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கூட்டத்தில் பேசியபோது இந்து மதத்திற்கு எதிராகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசினார் என தரமணி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

நீதிமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நீதிமன்ற வாசலில் அமைந்துள்ள வராஹி வள்ளி அம்மன் ஆலயத்தில் அவர் தரிசனம் செய்தார். வழக்கு விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா அவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டி இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாக என் மீது போடப்பட்ட வழக்கில் இன்று ஆஜரானேன், எடப்பாடி பழனிச்சாமி அப்போது எதற்கு வழக்கு போட வேண்டும் என்று தெரியாமல் என் மீது அப்போது வழக்குப் போட்டு விட்டார் என்றார். பின்னர் திமுக அரசை விமர்சித்த அவர் இது செயல் அரசு அல்ல, விளம்பர அரசு என்றார்.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நிலவுவதாக பேசிய அவர், தமிழக அரசு காற்றாலை மின் உற்பத்தி போன்ற இயற்கைச் சூழலுக்கு ஏற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். கோடைக்காலத்தில் மின்cut தண்ணீர் cut எல்லாம் இருக்கிறது, ஆனால் மணிக் cut தான் இல்லை, அதை அமைச்சர் செந்தில் பாலாஜி சரி செய்ய வேண்டும் என்றார். தருமபுர ஆதீனத்தின் பட்டணப் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் பல்லக்கில் பயணம் செய்பவன் புண்ணியம் செய்தவன்,அவனை தூக்கி சுமப்பவன் பாவி என்ற கோட்பாடு உள்ளது. பல்லக்கில் தூக்கி செல்வது ஆதினங்கள் வேண்டாமென்று சொல்ல வேண்டும், நானும் ஆதீனத்தை மதிக்கிறேன், ஆனால் இந்துமத பண்பாட்டு கோட்பாடை நான் வெறுக்கிறேன் என்றார்.

நாங்கள் சைவர்கள் எனக் கூறிய அவர் பட்டின பிரதேசத்தை அரசு அனுமதித்தாலும் நான் அதை எதிர்க்கிறேன் என்றார். முன்பு கடவுள் மறுப்பு இப்போது கடவுள் ஏற்பு கொள்கையா என திமுகவை கேள்வி எழுப்பியனார், சமயப் புரட்சி இல்லையேல் அரசியல் புரட்சி இல்லை எனக் கூறிய சீமான் முருகன், சிவன் கடவுள்கள் இந்துவா 63 நாயன்மார்கள் இந்துவா என கேள்வி எழுப்பினார்.