குடியரசுத் தலைவர் தேர்தலில் அடிச்சுத்தூக்கும் திரெளபதி முர்மு.. பாஜகவுடன் கைகோர்த்த பிஜூ ஜனதாதளம்!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு பிஜூ ஜனதாதளத்தின் ஆதரவு உறுதியாகிவிட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜன நாயக் கூட்டணியின் வேட்பாளராக திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் முன்னாள் பாஜககாரர்தான். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணியை விட ஒன்றரை சதவீத வாக்குகளை எதிர்க்கட்சிகளும் சுயேட்சைகளும் கூடுதலாக வைத்துள்ளன. ஈகோ எதுவும் இல்லாமல் அனைத்து எதிர்க்கட்சிகளும் சுயேட்சைகளும் ஒன்று சேர்ந்தால், எதிர்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஆனால், ஒன்றரை சதவீதம் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறைவாகவே இருப்பதால், இந்த வாக்குகளைப் பெறுவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சிக்கல் எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது. பாஜக அரசுக்கு ஒடிஷாவில் உள்ள பிஜூ ஜனதாதளமும் ஆந்திராவில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் கடந்த காலங்களில் மாநிலங்களவையில் ஆதரவை வழங்கி வந்திருக்கின்றன. கட்ந்த 2017 குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்திய ராம்நாத் கோவிந்தை பிஜூ ஜனதா தளமும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஆதரித்தன. எனவே, இந்த இரு கட்சிகளும் இந்த முறையும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டதும், “ஒடிஷாவில் பாஜக - பிஜூ ஜனதா தள கூட்டணி ஆட்சியில் இரு முறை எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் இருந்த எனக்கு ஒடிஷாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே திரெளபதி முர்முவுக்கு பிஜூ ஜனதா தளத்தின் ஆதரவு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பீஜூ ஜனதா தளத்தின் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக் வரவேற்று பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், “நாட்டின் மிக உயரிய பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துகள். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி என்னுடன் விவாதித்தபோது நான் மகிழ்ச்சியடைந்தேன் ஒடிசா மக்களுக்கு இது உண்மையிலேயே பெருமையான தருணம். முர்மு, நாட்டில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.” என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். ஒடிஷாவைச் சேர்ந்த முர்மு, நவீன் பட்நாயக் இடம் பெற்றவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் பிஜூ ஜனதாதளம் ஆதரித்திருக்கும். தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்தவரையே நிறுத்தியிருப்பதால பிஜூ ஜனதா தளத்தின் ஆதரவு முர்முவுக்கு உறுதியாகிவிட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஜூ ஜனதாதளத்துக்கு சுமார் 21 ஆயிரம் வாக்கு மதிப்புகள் உள்ளன.